Wednesday, July 29, 2009

கூத்து

இயல், இசை, நாடகம் என்பன முத்தமிழ். அவற்றுள் நாடகத் தமிழ் கூத்து,
நடனம், நாடகம் என மூன்று வகைப்படும். நடனத்திற்கும் நாடகத்திற்கும்
அடிப்படையாய் அமைந்தது கூத்து. அது வேத்தியல் கூத்து -பொதுவியல் கூத்து,
உலகியல் கூத்து - தேவியல் கூத்து, வசைக் கூத்து - புகழ்க் கூத்து,
அமைதிக் கூத்து - வேடிக்கைக் கூத்து, அரங்கக் கூத்து - தெருக் கூத்து
எனப் பல்வேறு வகையில் இரண்டிரண்டாக வகைப்படுத்தப்படும்.


"குதித்து ஆடுவது கூத்து" என்பார் பாவாணர். தெருக்கூத்து, கதைக்களி,
யட்சகானம் ஆகியவற்றில் நடிப்போர் குதித்தாடுதல் நோக்கி அவர் இவ்வாறு
கூறியிருக்கலாம்.


"குத்துதல்" என்ற சொல்லுக்குப் பல பொருள்களை அகரநிரலி (lexicon)
தருகிறது. அவற்றுள் இடம்பெறாத ஒரு பொருள் "தரையைக் குத்தி ஆடுதல்"
என்பதாம். இந்தப் பொருளில் இச் சொல் இன்றும் மக்கள் வழக்கில்
வழங்கிவருகிறது. கல்லாத எளிய மக்கள் நன்றாய் ஆடுபவனை "எப்படிக்
குத்துகிறான் பார்" என்று வியந்து பாராட்டுகின்றனர். தப்பை இசைக்கேற்ப
ஆடும் ஆட்டத்தைத் "தப்பாங்குத்து" (டப்பாங்குத்து) என்றே வழங்குகின்றனர்.
ஆடுபவர்களை தப்பாங்குத்து குத்தச் சொல்லிக் கண்டு மகிழ்கின்றனர்.

இந்தக் "குத்து" என்ற சொல்லிலிருந்துதான் "கூத்து" என்னும் சொல்
தோன்றியுள்ளது. குத்து -> கூத்து.

1 comment:

  1. /"குத்துதல்" என்ற சொல்லுக்குப் பல பொருள்களை அகரநிரலி (lexicon)
    தருகிறது. அவற்றுள் இடம்பெறாத ஒரு பொருள் "தரையைக் குத்தி ஆடுதல்"
    என்பதாம். இந்தப் பொருளில் இச் சொல் இன்றும் மக்கள் வழக்கில்
    வழங்கிவருகிறது. கல்லாத எளிய மக்கள் நன்றாய் ஆடுபவனை "எப்படிக்
    குத்துகிறான் பார்" என்று வியந்து பாராட்டுகின்றனர். தப்பை இசைக்கேற்ப
    ஆடும் ஆட்டத்தைத் "தப்பாங்குத்து" (டப்பாங்குத்து) என்றே வழங்குகின்றனர்.
    ஆடுபவர்களை தப்பாங்குத்து குத்தச் சொல்லிக் கண்டு மகிழ்கின்றனர்.

    இந்தக் "குத்து" என்ற சொல்லிலிருந்துதான் "கூத்து" என்னும் சொல்
    தோன்றியுள்ளது. குத்து -> கூத்து. /

    அருமை

    தொடருங்கள்

    ReplyDelete