Saturday, December 25, 2010

வேட்டை

நம் தமிழ்மொழியில் உள்ள ஒலிக்குறிப்புச் சொற்களுள் பல அடிச்சொற்களாகவும்
அமைந்துள்ளன. அவற்றுள் ஒன்று "விரு"(விர்) என்பது. விரைவுப் பொருளை அடிக்
கருத்தாகக் கொண்டது. "விருவென்று பறவை பறந்துபோனது", "விருவென்று சினம்
வந்தது", "விருவிருவென்று போ" ஆகிய தொடர்களில் "விரு" என்ற சொல் விரைவுப்
பொருளில் வந்துள்ளது.


விருவிருத்தல் = விரைதல்.
விருவிருப்பு = விரைவு.

விரு -> விருட்டு. "விருட்டென்று நடந்துபோ" என்பது நெல்லை வழக்கு.

விரு -> விரை.
விரைதல் = 1.வேகமாதல். "தன்னை வியந்தான் விரைந்து கெடும்" (குறள்,474)
2.உடனே செய்யத் துடித்தல் 3.ஆவலை வெளிக்காட்டுதல்.
விரை -> விரைவு = வேகம்.
விரைசொல் = விரைவைக் குறிக்கும் அடுக்குச் சொல் (தொல்.424)

விரைவு -> விரைசு. "விரைசாய் நடந்து போ" என்பது நெல்லை வழக்கு.
விரைசு -> விரைசல் = சுறுசுறுப்பு. (கொங்கு வழக்கு)
விரைசு -> விரசு = விரைவு.
விரசுதல் = 1.மிகவும் விரைவுபடுத்துதல் 2.சொல்லால் கடிந்து வெருட்டுதல்.


உடலும் நெஞ்சாங்குலையும் விரைந்து அசைவது அச்சத்தைக் குறிக்குமாதலால்,
விரைவுக் கருத்திலிருந்து அச்சக் கருத்து பிறக்கும் என்பார் மொழிஞாயிறு
ஞா.தேவநேயப் பாவாணர்.

விரை -> விர -> விரள்.
விரளுதல் = அஞ்சுதல்.
விரள் -> விரட்டு.
விரட்டுதல் = 1.துரத்துதல் 2.அச்சுறுத்துதல் 3.மிக விரைவுபடுத்துதல்.


விரு -> வெரு = அச்சம். "வெருவரு நோன்றாள்" (பொருந.147).
வெரு - Skt.'biru', 'bhiru'.
ஒ.நோ: OE.'faer' OS.'far' OHG.'far' G.'(ge)fahr' ON.'far' M.Du.'vaer' E.'fear'.


வெருவெருத்தல் = அஞ்சுதல்.
வெரு -> வெருவு.
வெருவுதல் = அஞ்சுதல். "யானை வெரூஉம்" (குறள்.599).
வெருவு = அச்சம்.
தெ. 'வெரப்பு'.
வெருவருதல் = 1.அஞ்சுதல் 'வெருவந்த செய்யாமை' (குறள்) 2.அச்சந்தருதல்.
"வெருவரு தானை" (பதிற்.70.பதி)
வெருவா -> வெருவந்தம் = அச்சம்.

வெருவு -> வெருகு = அஞ்சத்தக்க காட்டுப் பூனை.
Ka.'bergu','beggu'. Tu.'beru' Kod.'beggi' Ga.'verig'.


வெருக்கொள்ளுதல் = அச்சங்கொள்ளுதல்.
வெருகு -> வெருக்கு = அச்சம். "வெருக்கு வெருக்கென்றிருக்கிறது". (உ.வ.)


வெரு -> வெருள்.
வெருளுதல் = 1.மருளுதல். "கண்டார் வெருளாவண்ணம்" (திருவாச.32.3)
2.அஞ்சுதல். "பீடற வெருளி" (பெருங்.மகத.24.84) 3.மாடு குதிரை முதலியன
மிரண்டு கலைதல்.
வெருள் = 1.அஞ்சத்தக்கது. "நின்புகழ் இகழ்வார் வெருளே" (திருவாச.6.17)
2.மனக் கலக்கம் (சூடா)
வெருள் -> வெருளி = 1.மருட்சி. "வெருளி மாடங்கள்" (சீவக.532) 2.வெருளச்
செய்யும் புல்லுரு முதலியன. 3.வறியாரை வெருட்டும் செல்வச் செருக்கு.
"வெருளி மாந்தர்" (சீவக.73)


வெருள் -> வெருட்டு.
வெருட்டுதல் = 1.அச்சுறுத்துதல். "படர்சடைக ளவைகாட்டி வெருட்டி"
(தேவா.676.2) 2.திகைக்கச் செய்தல். "நாட்டை வெருட்டித் திரிகிற"
(ஈடு.2,7,8.) 3.விலங்கு முதலியவற்றை ஓட்டுதல்.
வெருட்டு = 1.அச்சம் உண்டாக்குகை 2.ஓட்டுகை 3.வேகமாகச் செல்லத் தூண்டுகை.


வெருட்டு -> வெருட்டை -> வேட்டை.
வேட்டை = விலங்கு பறவைகளை விரட்டிப் பிடிக்கும் வினை அல்லது தொழில்.
"வேட்டை வேட்கைமிக" (கம்பரா.நகர்நீங்.74) 2.வேட்டையில் கிடைக்கும்
பொருள். "வேட்டை வாய்த்ததின்று" (திருவாலவா.44.38) 3.வேட்டையில் நேரும்
கொலை. "ஆருயிர் வேட்டை" (திருநூற்.56).
ம.'வேட்டை' தெ.'வேட்ட' க.'பேட்ட'.

வேட்டை -> வேட்டம் = 1.வேட்டை "வயநாய் பிற்பட வேட்டம்போகிய குறவன்"
(அகநா.182) 2.தலைவேட்டையாடும் கொலை. (பிங்.)

வேட்டையாடுதல் = கொல்லுதற்கேனும் பிடித்தற்கேனும் காட்டிலுள்ள விலங்கு
முதலியவற்றைத் துரத்திச் செல்லுதல்.
வேட்டைநாய் = 1.வேட்டையாடப் பழகிய நாய் 2.விரட்டிக் கடிக்கும் நாய்.


வேட்டம் -> வேட்டுவன் = 1.வேட்டைக்குச் செல்வோன் 2.வேடன் 3.குறிஞ்சி நில ஆடவன்.
வேட்டுவன் -> வேடுவன் = வேடன்.


வேடுவன் -> வேடு = 1.வேடன் (இலக்.அக) 2.வேடர்குலம் "வேடுமுடை வேங்கடம்"
(திவ்.இயற்.47) 3.வேடர் தொழில் "வேட்டொடு வேய்பயில் அழுவத்து" (அகநா.318)
4.வரிக்கூத்து வகை (சிலப்.3:13.உரை).
வேடு -> வேடன் = 1.வேட்டுவன் 2.பாலை நில வாழ்நன். (திவா)
ம.'வேடன்' தெ. 'வேட்ட' க. 'பேட' து. 'வேட்ட'.

Saturday, December 18, 2010

வம்பு

"வெண்ணெய் திரண்டுவரும்போது தாழியை உடைத்ததுபோல், அந்தக் காரியத்தை
வம்பாய்க் கெடுத்திட்டாயே !"
தெருவிலே தம் நண்பரோடு ஒருவர் இவ்வாறு பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டதும்,
'ஊர் வம்பெல்லாம் உனக்கு எதற்கு?' என்று ஒதுங்கிப்போகும் இயல்புடைய
எனக்கு வம்பைப்பற்றி ஆராயும் எண்ணம் தோன்றியது.

தொல்தமிழின் முந்துநூலான தொல்காப்பியம் "வம்பு" என்ற சொல்லின் பொருள்
"நிலையின்மை" என்று உரியியலில் குறிப்பிடுகிறது. நிலையாக ஓரிடத்து
இல்லாமல் வேற்றூரில் திரிவோரையும் நிலையான தம் இயல்புகளிலிருந்து மாறி
அமையும் மக்களையும் இயற்கையையும்கூட "வம்பு"ச் சொல் குறித்துள்ளது.

வம்ப மாந்தர் = தம் ஊரில் வதியாது வேற்றூர் வந்த புதியோர்.
வம்பலன் = புதியோன், வழிப்போக்கன், அயலான்.
வம்ப மாக்கள் = புதியோர். (சிலப்,5.111)
வம்பப் பரத்தர் = ஒரு கூட்டத்திலும் சேராத மாந்தர்.(சிலப்,16.63 உரை)
வம்பப் பரத்தை = கழிகாமத்தையுடைய கணிகை. (சிலப்,10.219)
வம்புப் பிள்ளை = முறைதவறிய பெண் பெற்ற குழந்தை.
வம்ப மாரி = காலமல்லாத காலத்துப் பெய்யும் மழை.
வம்புக் காய் = பருவம் தப்பிக் காய்க்கும் காய்.
வம்புப் பாளை = பருவமற்ற காலத்தில் பனைமரம் புதிதாக விடும் பாளை.


நிலையில்லாத இவற்றால் நீடித்த பயன் இல்லை என்பதை மக்கள் உணர்ந்தபின்னர்
"வம்பு"ச்சொல், 'பயன் இல்லாமை, வீண்' ஆகிய பொருள்களை உணர்த்தியுள்ளது.
வம்பு = பயன் இல்லாமை. "வம்பு பழுத்து" (திருவாச.40.6)
வம்பன் = பயனற்றவன். "வம்பனாய்த் திரிவேனை" (திருவாச.42.9)

இச் சொல் தெலுங்கு மொழியில் இதே பொருளில் "வம்மு" என வழங்குகிறது.
பயனற்றுப் போதலைத் தெலுங்கர் "வம்மு போவு" (வம்பாய்ப் போதல்) எனக்
குறிப்பிடுகின்றனர்.


அதன்பின்னர் தீயனவற்றைப் பேசுதலும் செய்தலுமே பயனற்றவை எனக் கொண்டு,
அவற்றின் வகைகளையும் "வம்பு"ச் சொல் பொருள்களாகப் பெற்றுவிட்டது.

வம்பு = 1.வீண்சொல், 2.பழிச்சொல், 3.தீய சொல், 4.பொய், 5.இடக்கர்ச் சொல்,
6.சிற்றொழுக்கம், 7.சிறு சண்டை.

வம்படித்தல் = 1.வீண்சொல் பேசுதல், 2.வேடிக்கையாய்ப் பேசுதல், 3.தீது
பேசுதல், 4.பழித்துப் பேசுதல், 5.தீங்கு செய்தல்.

வம்பளத்தல் = பழிமொழி பேசுதல்.

வம்புப் பேச்சு = வீண் பேச்சு.


"வழு" என்ற சொல்லிலிருந்து இச் சொல் தோன்றியிருக்கலாம்.

வழுவுதல் = நழுவுதல், சறுக்குதல், தவறுதல்.

வழுக்குதல் = சறுக்குதல், தவறு செய்தல்

வழுவழுத்தல் = வழுக்குதல், வழவழப்பாதல்.

வழுக்கும் இடத்தில் கால் நிலையாய் நிற்கமுடியாமையால் நிலையின்மைப் பொருள்
தோன்றி இருக்கலாம்.

வழு -> வழும்பு.
வழும்பு = தீங்கு, குற்றம்.

வழும்பு -> (வய்ம்பு) -> வம்பு.
ஒ.நோ : குழும்பு -> (குய்ம்பு) -> கும்பு.
கும்பு -> கும்பல்.


தீயனவற்றைப் பேசுதலையும் செய்தலையும் குறிக்கும் "வம்பு"ச் சொல், "வன்பு"
என்ற சொல்லின் திரிபாகும். "வல்" என்ற பொருந்தற் கருத்து வேரிலிருந்து
பிறக்கும் 'வல்லமை', 'வலிமை' ஆகிய சொற்கள் கட்டுப்பாடுடைய ஆற்றலையும்
'வன்மை' என்ற சொல் கட்டுப்பாடற்ற ஆற்றலையும் குறித்திடும்.

வல் -> வன் -> வன்மை.
வன்பாடுபடுதல் = அரும்பாடுபடுதல்.
வன்கொலையாய் இருத்தல் = பசி,பட்டினியாய் இருத்தல்.
வன்கொடுமை = மிகப் பெரிய கொடுமை.

வன் + பு = வன்பு -> வம்பு.
ஒ.நோ : தென்பு -> தெம்பு.

உடலில் வன்மை மிகுந்தால் செய்யவேண்டாத செயல்களை எல்லாம் செய்யத்
தூண்டும். இதன் அடிப்படையில்தான், 'வம்பு வளர்த்தல், வம்புச் சண்டைக்குப்
போதல், வம்புதும்பு பண்ணுதல், ஊர்வம்பை விலைக்கு வாங்குதல், வம்பேறி'
முதலான சொல் வழக்குகள் எழுந்துள்ளன.


"வம்பு"ச் சொல், 'அரைக் கச்சு, யானைக் கச்சு, மார்புக் கச்சு, கையுறை,
மேற்போர்வை' ஆகிய பொருள்களையும் குறிக்கிறது. இவை வளைவுக் கருத்து வேரான
"வல்" என்பதினின்று தோன்றியிருக்கலாம்.

வல் -> வலை.
வல் -> வலம் (ஊர்வலம், வலம்வருதல்)
வல் -> வல.
வலத்தல் = சுற்றுதல், சுற்றிக் கட்டுதல்.
வல் -> வன் -> வன்பு -> வம்பு.