Saturday, December 6, 2008

கரவணம்

தமிழ்ச் சொற்கள் பல ஒலிப் பிறழ்வால் உரு மாறி வடசொற்களாய் வழங்கிவருகின்றன. அவற்றுள் ஒன்று "கரவணம்" (கிரகணம்) . "கரத்தல்" என்ற சொல் மறைதலையும் மறைத்தலையும் குறிக்கும். அதனால்தான் பகலில் மறைந்து திரியும் பூச்சி "கரப்பான்" எனப்பட்டது. உள்ளத்தால் ஒன்றை மறைக்கும் "வஞ்சனை"யும், சொல்லால் ஒன்றை மறைக்கும் "பொய்"யும், மறைவாக ஒன்றைக் கவரும் "திருட்டு"ம் "கரவு" எனப்பட்டன. திருடர்கள் "கரவடர்" எனப்பட்டனர்.

அதுபோல ஞாயிறும் திங்களும் வானில் மறைபடும் நிகழ்வு "கரவணம்" எனப்பட்டது. இந்தக் "கரவணம்" என்ற சொல்தான் "கரகணம்" எனத் திரிந்து வடமொழியில் "கிரகணம்" என்று வழங்கிவருகிறது.

2 comments:

  1. ஆர்வூட்டும் பதிவு. நன்றி.
    கரவு > கரவு + அணம் > கரவணம் என்பது இயலும் ஒரு சொல்லே. ஆனால் நீங்கள் சொல்வதுபோல
    எங்கே 'நம் முன்னோர்கள்' பயன்படுத்தியிருக்கின்றார்கள் என்பதை காட்டினீர்கள் எனில் வலுவூட்டுவதாக இருக்கும்.

    அடுத்து எப்படி வ என்பது ஹ என்றாகியது என்றும். அதுபோல ஆன பிற சொற்களையும் எடுத்துக்காட்டினால். கரவணம் > க்ரஹண என்றாகியது என்பதை மிக வலுவாகக் காட்ட முடியும்.

    சமற்கிருதத்தில் ग्रहण (க்³ரஹண) என்பது 'பிடித்தல்'
    என்னும் பொருள் கொண்டது. எனவே 'பாம்பு' 'பிடித்தது, விழுங்குகிறது' என்று 'விளக்குகின்றார்கள்'.
    மோனியர் வில்லியம்சு அகரமுதலி தரும் பொருள்களில் சில:
    ग्रहण seizing , holding Hariv. 2734; a prisoner MBh. xiii , 2051;seizing , holding , taking S3Br. xiv Mn. ii , 317 MBh. &c. ; taking by the hand , marrying , i , 1044; n. catching , seizure , taking captive Mn. v , 130 MBh. &c; n. seizure of the sun or moon , eclipse A1p. i , 11 Ya1jn5. i , 218 VarBr2S. &c

    வேறு பல பொருள்களும் தந்துள்ளார்கள். பாணிக்கிரஹ என்பதும் திருமணத்தில் கையைப் பிடிப்பது. எனவே திருமணம் என்னும் பொருள் தருவது. எனவே கிரஹ என்பது 'பிடித்தல்' என்னும் பொருள் தருவது.

    தமிழ்ச்சொல்லாக இருந்திருக்க முடியாது என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் நிறுவதலில் இன்னும் என்னென்ன கருத்துகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதை மட்டுமே எடுத்துக்கூறுகின்றேன்.

    ReplyDelete