Tuesday, May 5, 2009

நாம்

தொல்காப்பியத்தில் வழங்கும் மிகத் தொன்மையான சொல் இது. இதன் மூலச்சொல் "நா" (நாக்கு) என்பதாம். நாலும் (தொங்கும்) உறுப்பு "நா" எனப்பட்டது.

முற்கால மாந்தர் நாக்கினைக் கண்டு அஞ்சியுள்ளனர் என்பதனை இச் சொல் வரலாறு எடுத்துக்காட்டுகிறது. நாக்கை நீட்டிக்கொண்டிருக்கும் உயிரிகளான நாயையும் நாகத்தையும் மட்டும் அல்லாமல் நா நீட்டி அலைவதாகக் கருதிய பேயையும்
நினைத்து அஞ்சிய மக்கள் நாவிற்கே அச்சப் பொருள் கொண்டுவிட்டனர். அதனால்தான், கொழுந்துவிட்டு எரியும் தீச்சுடர்களைத் "தீநாக்குகள்" என்று அச்சத்தோடு அழைக்கின்றனர்.

நா + அம் = நாம் (=அச்சம்)
நாம் + அம் = நாமம் (=அச்சம்)

இன்றும் கண்ணெச்சிலுக்காக வைக்கப்படும் பொம்மைகள் நாக்கை நீட்டி அச்சுறுத்தும் வகையில் அமைக்கப்படுதல் காண்க.

நாயும் நாகமும்கூட நாவினால் பெயர்பெற்றவையே.

நா + இ = நாஇ -> நாயி -> நாய்.
நாவு + அம் = நாவம் -> நாகம்.

Wednesday, April 1, 2009

ஒட்டியாணம்

பெண்கள் இடுப்பில் அணியும் பொன் அணிகளுள் ஒன்று ஒட்டியாணமாகும். இதன்
பழைய பெயர் "உடைஞாண்" என்பதாம். ஆண்கள் அரைஞாண் அணிதல்போலப் பெண்கள் அக்
காலத்தில் உடைஞாண் அணிந்திருந்தனர். ஆனால் உடைஞாண் பெரும்பாலும் பொன்னால்
செய்யப்பட்டதால் "உடைஞாணம்" எனப்பட்டது. "உடைஞாணம்" பேச்சுவழக்கில்
"உடையாணம்" என்று திரிந்து வழங்கியது.

"உடையாணம்" என்ற சொல் கன்னட தெலுங்கு மொழிகளில் "ஒடையாணம்" என்று மருவி,
"ஒட்யாணம்" என வழங்கத் தலைப்பட்டது. "ஒட்யாணம்" என்ற சொல்தான் இலக்கண
அமைதி பெற்று "ஒட்டியாணம்" என்று தமிழில் வழங்குகிறது. இன்றும் மலைஞால
மொழியில் "உடைஞாண்" என்றே உண்மையான வடிவில் வழங்குகிறது!

தாறு

தொன்றுதொட்டுப் பயன்பாட்டில் இருந்துவரும் உடுப்பு வகைகளுள் ஒன்று தாறு.தற்று உடுத்தப்படும் ஆடை என்பதனால் தாறு எனப்படுகிறது. தறுதல் என்றால் "இறுக்கிக் கட்டுதல்" என்பது பொருள். "குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்" என்ற குறட்பாவில் (1023) இச் சொல் பயின்றுவந்துள்ளது.

தமிழர் கண்ட உடைவகையே தாறு என்பதையும் இக் காலப் பார்ப்பனர்கள் கட்டும் பஞ்சக்கச்சமும் ஒருவகைத் தாறே என்பதையும் மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் அவர்கள் விரிவாக விளக்கியுள்ளார். இந்தத் தாறு என்ற சொல்லை, மராத்தி மொழி
"தாதி" என வழங்குகிறது. இதனை மேலும் திரித்து வட இந்திய மொழிகள் "தோ(த்)தி" என வழங்குகின்றன.

தற்று உடுக்கப்படும் பெண்களின் ஆடை "தற்றாடை" (தட்டாடை) என வழங்கும். பார்ப்பனப் பெண்கள் இக் காலத்தில் கட்டும் "மடிதாறு" (மடிசார்)கூட ஒருவகைத் தற்றாடையே! இலங்கையில் சிங்களப் பெண்கள் கட்டும் இருபது முழம் சேலை "தற்றுடுப்பு" (தட்டுடுப்பு) என்றே அழைக்கப்படுகிறது. கால்களைச் சுற்றிச் சுரிந்து கட்டப்பட்ட வடநாட்டுப் பெண்களின் தற்றாடை இக்
காலத்தில் பையாடையாக மாறிவிட்ட பின்னரும் "சுரிதாறு" (சுரிதார்) என்றே அழைக்கப்படுகிறது!

அரையில் அணியும் உள்ளாடைகள் அக்காலத்தில் "தற்றி" எனப்பட்டன. கன்னடம், துளு, போன்ற திரவிட மொழிகள் இச் சொல்லைத் "தட்டி" என வழங்குகின்றன. தமிழர்களாகிய நாமோ "தட்டி"யையும் "ஜட்டி"யாக மாற்றி வழங்கிவருகின்றோம்.
இனிமேலாகிலும் "தற்றி" (தட்டி) எனச் செவ்வையாய் வழங்குவோமா?

Wednesday, December 24, 2008

அட்டவணை

அட்டவணை என்ற சொல் மராத்தி மொழியிலிருந்து வந்தது என்று சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி குறிப்பிடும். ஆனால், ஆய்ந்து காண்கையில் அது தூய தமிழ்ச் சொல்லாகவே தோன்றுகிறது. அடுத்தல் = ஒன்றன்மேல் ஒன்றாய்ச் சேர்த்தல். அடு ->அடுக்கு


அடுக்குதல் =
1.கலங்கள்போல் ஒன்றன்மேல் ஒன்றாக வைத்தல்
2.வரிசைப்பட வைத்தல்
3.பணத்தை மேன்மேலும் பெருக்குதல்
4.சொற்களை மேன்மேலும்
தொடுத்தல்.


அடுக்கு =

1.ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கியது
2.வரிசை
3.அடுக்குக் கலம்
4.அடுக்குத் தொடர்
5.மேன்மேலும் உயர்ந்திருக்கும் செழிப்பு நிலை. அடுக்குஅடுக்காய் =
கட்டுக்கட்டாய், வரிசைவரிசையாய்.


அடுக்கல் =

1.ஒன்றன்மேல் ஒன்றாக வைத்தல்
2.அடுக்கு
3.குவியல்
4.அடுக்கடுக்காய் அமைந்த மலை.


அடுக்குத் தீவம் =
ஒன்றன்மேல் ஒன்றான வட்ட வரிசைகளாக அமைக்கப்பட்ட கோயில் விளக்கு வகை.
அடு -> அட்டு.
அட்டு -> அட்டி = நெல்,அரிசி

மூட்டைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிவைக்கும் வரிசை முறை.
அட்டி -> அட்டியல் = மூட்டைகளை அடுக்கிவைக்கும் வரிசை முறை.

அட்டு -> அட்டம் = கோட்டையின் மேலாக அமைக்கப்படும் காவல் பரண்.

அட்டம் -> அட்டாலை = வயல்களிலும் கோட்டையிலும் அமைக்கப்படும் காவல் பரண்,வீட்டுப் பரண்.
அட்டம் + அணை = அட்டமணை.

அட்டமணை -> அட்டவணை = பொருட்குறிப்புகளை அல்லது செய்திகளை ஒன்றன்மேல் ஒன்றாக எழுதிவைக்கும் பட்டியல், குறிப்பேடு.

கன்னடம் : அட்டவணெ.
துளுவம் : அட்டணெ. மராத்தி : அடவண.

Sunday, December 14, 2008

தோன்றின் புகழோடு தோன்றுக

காலை எழுந்ததும் குளம்பி குடித்துக்கொண்டே குறளைப் படிப்பது என் பழக்கம். அன்று "புகழ்" படித்துக்கொண்டிருந்தேன். என் பக்கத்து வீட்டு நண்பர், எங்கள் இல்ல வடிப்புக்குளம்பி(Filter coffee)யின் வழமை அன்பர், அருகில் வந்து அமர்ந்தார். நான் படித்த பகுதியைப் பார்த்துவிட்டுக் கேட்டார் : "இதில், `தோன்றின் புகழொடு தோன்றுக' என்ற குறள் நடைமுறைக்கு ஒத்துவராததாகத் தெரிகிறதே! புகழோடு பிறப்பதற்கு நாம் என்ன அமைச்சர் மக்களா, இல்லை நடிகர்களின் மக்களா, அல்லது இறும்பூதுப்
பிறவிகளா? பிறக்கும்போதே ஒருவர் எப்படிப் புகழோடு பிறக்கமுடியும்?" மடமடவென்று வினாக்களைத் தொடுத்த நண்பர், நான் என்ன சொல்லப்போகிறேன் என்று என் முகத்தையே பார்த்தார்.

"அந்தக் குறளைப் பார்த்தவுடன் உங்களுக்குத் தோன்றிய கருத்தைச் சொல்லிவிட்டீர்கள். இதிலிருந்தே தோன்றுதல் என்றால் பிறத்தல் என்ற பொருள் மட்டுமன்று, உள்ளத்தில் தோன்றுதல் என்ற பொருளும் உண்டென்பது தெரிகிறது அல்லவா? சரி, புத்தர், காந்தி போன்ற பெருமக்களை நினைத்தவுடன் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?" "அவர்களின் செயற்கருஞ் செயல்கள்"

"அதாவது, அவர்களின் புகழ் உங்களுக்குத் தோன்றுகிறது. நல்லது; இற்றிலர்(Hitlor), கோட்சே போன்றோரை நினைத்தவுடன்" "அதாவது, அவர்களைப் பற்றிய இகழ் உங்கள் உள்ளத்தில் தோன்றுகிறது. இப்படிப் புகழும் இல்லாமல் இகழும் இல்லாமல் இந்த உலகத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறைந்தவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்? " "அவர்கள்தாமே உலகத்தில் பெரும்பான்மையினர்." "நல்லது.

இந்த மூன்று வகையான மக்களைப் பற்றித்தாம் திருவள்ளுவர் இக் குறளில் குறிப்பிட்டிருக்கிறார்." "எப்படி?"

"தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று அதாவது, பிறர் உள்ளங்களில் தோன்றினால் புகழோடு தோன்றுக. அது முடியாதவர்கள் இகழோடு தோன்றுவதைக் காட்டிலும் இந்த உலகத்தில் பிறந்து வளர்ந்து தான் வாழ்ந்த சுவடே தெரியாமல் மறைந்துபோகும் மக்களைப் போல ஒன்றுமே தோன்றாதிருப்பது நன்று. இப்போது சொல்லுங்கள்.. இந்தக் குறள்
நடைமுறைக்கு ஒத்ததுதானே.." நண்பர் நாவசைக்கமுடியாது ஆமெனத் தலையாட்டினார்.

Sunday, December 7, 2008

முனைவர்

பல்கலைக்கழகங்களில் வழங்கப்பெறும் "டாக்டர்" பட்டப் பெயரினைப் "பண்டாரகர்" என்று வழங்கினார் பாவாணர். ஆனால் அச் சொல் சிலர்க்குப் பண்டாரத்தை நினைவூட்டியதால் "முனைவர்" என வழங்கத் தொடங்கினர். "வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல்நூல்" என்று தொல்காப்பியத்தைச் சான்று காட்டி இச் சொல்லே சரியான மொழிபெயர்ப்பெனச்
சிலர் வழக்காடினர். "முனைவு வெறுப்பாகும்" என்று தொல்காப்பியம்தானே கூறுகிறது. அதனால்தானே நம்மை வெறுக்கும் பகைவனும், உலகை வெறுத்த முனிவனும் "முனைவன்" எனப்பட்டனர் என்று சிலர்
எதிர்வழக்காடினர். வேறு சிலரோ"முனைதல்" என்ற சொல், ஒரு செயலை முழு ஈடுபாட்டோடு செய்வதைக் குறிக்கும்; எனவே, "முனைவர்" என்ற சொல்லைத் தொழில்முனைவோரைக் (entrepreneur) குறிக்க ஆளலாம் என்று கருத்துரைத்தனர்.

ஆனால் எதிர்ப்புகளை எல்லாம் மீறிக்கொண்டு "முனைவர்" என்ற சொல் இன்று வழக்கூன்றிவிட்டது. இதற்குப் பொருள் அமைதி எவ்வாறு கூறுவது? "முனை" என்ற சொல், முன்னையும் நுனியையும் முன்னிருக்கக்கூடிய தலைமையையும் நுனிவரையுள்ள உயர்வையும் குறிக்கும். எனவேதான், "முனைவன்" என்ற சொல் தலைவனையும் இறைவனையும் குறித்தது. முனை
- முனையன் - முனைவன். கல்வி நிலையில் உயர்வானதும் தலைமையானதுமான பட்டம் பெற்றவரை "முனைவர்" எனல் பொருத்தமுடையதுதானே.

Saturday, December 6, 2008

கரவணம்

தமிழ்ச் சொற்கள் பல ஒலிப் பிறழ்வால் உரு மாறி வடசொற்களாய் வழங்கிவருகின்றன. அவற்றுள் ஒன்று "கரவணம்" (கிரகணம்) . "கரத்தல்" என்ற சொல் மறைதலையும் மறைத்தலையும் குறிக்கும். அதனால்தான் பகலில் மறைந்து திரியும் பூச்சி "கரப்பான்" எனப்பட்டது. உள்ளத்தால் ஒன்றை மறைக்கும் "வஞ்சனை"யும், சொல்லால் ஒன்றை மறைக்கும் "பொய்"யும், மறைவாக ஒன்றைக் கவரும் "திருட்டு"ம் "கரவு" எனப்பட்டன. திருடர்கள் "கரவடர்" எனப்பட்டனர்.

அதுபோல ஞாயிறும் திங்களும் வானில் மறைபடும் நிகழ்வு "கரவணம்" எனப்பட்டது. இந்தக் "கரவணம்" என்ற சொல்தான் "கரகணம்" எனத் திரிந்து வடமொழியில் "கிரகணம்" என்று வழங்கிவருகிறது.